February 13, 2012

இறைவேதத்தின் மூலம் ஆய்வு, சிந்தனை, நல்லுணர்வு ஆகியவைகளை வளர்த்துக் கொள்ளல்!

மேலும், (அல்லாஹ்வாகிய) நாம் வானத்தை (நம்) சக்திகளைக் கொண்டு அமைத்தோம். நிச்சயமாக நாம் விரிவாற்றலுடையவராவோம். இன்னும், பூமியை - நாம் அதனை விரித்தோம். எனவே, இவ்வாறு விரிப்பவர்களில் நாமே மேம்பாடுடையோம். நீங்கள் சிந்தித்து நல்லுணர்வு பெறுவதற்காக ஒவ்வொரு பொருளையும் ஜோடி ஜோடியாக நாம் படைத்தோம். (அல்குர்ஆன்: 51:47,48,49)

February 12, 2012

உலகில் இறைவனால் கொடுக்கப்பட்ட வல்லமையைக் கொண்டு அந்த இறைவனையே நிராகரித்தால்....?

மேலும், மூஸாவி(ன் வரலாற்றி)லும் ஓர் அத்தாட்சி இருக்கிறது. நாம் அவரைத் தெளிவான ஆதாரத்துடன் ஃபிர்அவ்னிடத்தில் அனுப்பியபோது அவன் தன் (ஆட்சி, செல்வம், படைகள் ஆகியவற்றின்) வல்லமையின் காரணமாக (அவரைப்) புறக்கணித்து; "இவர் ஒரு சூனியக்காரர், அல்லது பைத்தியக்காரர்" என்று கூறினான். ஆகவே, நாம் அவனையும், அவனுடைய படைகளையும் பிடித்து அவர்களைக் கடலில் எறிந்தோம்; அவன் நிந்தனைக்கும் ஆளாகி விட்டான். (அல்குர்ஆன்: 51:38,39,40)

February 11, 2012

இறை திருப்தியைப் பெற்றுத்தரும் அழகிய செயல்கள்!

(தங்கள் இறைவனிடம் பயபக்தியுடைய) அவர்கள் இரவில் மிகவும் சொற்ப நேரமேயன்றித் தூங்கமாட்டார்கள். அவர்கள் விடியற்காலங்களில் (பிரார்த்தனைகளின்போது இறைவனிடம்) மன்னிப்புக் கோரிக் கொண்டிருப்பார்கள். அவர்களுடைய செல்வத்தில் இரப்போருக்கும், வசதியற்றோருக்கும் பாத்தியதை உண்டு. (அல்குர்ஆன்: 51:17,18,19)

February 10, 2012

குர்ஆன் எனும் இறுதி இறைவேதத்தை பொய்ப்பிப்பவர்களா நீங்கள்? இறைவசனத்தைக் கவனியுங்கள்!

எவருடைய (நன்மைகளின்) எடைகள் கனமாக இருக்கின்றனவோ அவர்கள் தாம் வெற்றியாளர்கள். ஆனால், எவருடைய (நன்மைகளின்) எடைகள் இலேசாக இருக்கின்றனவோ, அவர்கள் தாம் தங்களையே நஷ்டப்படுத்திக் கொண்டவர்கள். அவர்கள் தாம் நரகத்தில் நிரந்தரமானவர்கள். (நரக) நெருப்பு அவர்களுடைய முகங்களை கரிக்கும். இன்னும் அதில் அவர்கள் உதடு சுருண்டு (முகம் விகாரமானவர்களாக) இருப்பார்கள். "என்னுடைய வசனங்கள் உங்களுக்கு ஓதிக் காண்பிக்கப்படவில்லையா? அப்போது நீங்கள் அவற்றைப் பொய்ப்பிக்கலானீர்கள்" (என்று கூறப்படும்) (அல்குர்ஆன்: 23:102-105)

February 09, 2012

உலகில் வாழ்வதற்காக கொடுக்கப்பட்ட கால அவகாசத்தை வீணே விளையாடி விட்டு இறுதி நேரத்தில் இந்த வெற்று கூற்று தேவையா?

அவர்களில் ஒருவனுக்கு மரணம் வரும்போது, அவன்; "என் இறைவனே! என்னைத் திரும்ப (உலகுக்குத்) திருப்பி அனுப்புவாயாக!" என்று கூறுவான். "நான் விட்டுவந்ததில் நல்ல காரியங்களைச் செய்வதற்காக" (என்றும் கூறுவான்). அவ்வாறில்லை! அவன் கூறுவது வெறும் வார்த்தையே(யன்றி வேறில்லை) அவர்கள் எழுப்பப்படும் நாள்வரையும் அவர்கள் முன்னே ஒரு திரையிருக்கிறது. (அல்குர்ஆன்: 23:99-100)

February 08, 2012

ஒன்றுக்கு மேற்பட்ட கடவுளர்கள் நடைமுறைக்கு சாத்தியமா?

எனினும், நாம் அவர்களிடம் உண்மையை கொண்டுவந்தோம். ஆனால் நிச்சயமாக அவர்களோ பொய்யர்களாகவே இருக்கிறார்கள். அல்லாஹ் தனக்கென ஒரு மகனை எடுத்துக் கொள்ளவில்லை. அவனுடன் (வேறு) நாயனுமில்லை. அவ்வாறாயின் (அவர்கள் கற்பனை செய்யும்) ஒவ்வோர் நாயனும் தான் படைத்தவற்றை(த் தன்னுடன் சேர்த்து)க் கொண்டு போய் சிலர் சிலரைவிட மிகைப்பார்கள். (இவ்வாறெல்லாம்) இவர்கள் வர்ணிப்பதை விட்டும் அல்லாஹ் மிகவும் தூயவன். அவன் மறைவானதையும் பகிரங்கமானதையும் நன்கறிபவன். எனவே அவர்கள் (அவனுக்கு) இணை வைப்பவற்றை விட்டும் அவன் மிகவும் உயர்ந்தவன். (அல்குர்ஆன்: 23:90-92)

February 07, 2012

மனிதா! உண்மை தெளிவாய் தெரிந்தும் ஏன் இந்த மதிமயக்கம்?

'நீங்கள் அறிந்திருந்தால், இப் பூமியும் இதிலுள்ளவர்களும் யாருக்கு(ச் சொந்தம்? என்று (நபியே!) நீர் கேட்பீராக! "அல்லாஹ்வுக்கே" என்று அவர்கள் கூறுவார்கள்; "(அவ்வாறாயின் இதை நினைவிற்கொண்டு) நீங்கள் நல்லுணர்வு பெறமாட்டீர்களா?" என்று கூறுவீராக! "ஏழு வானங்களுக்கு இறைவனும் மகத்தான அர்ஷுக்கு இறைவனும் யார்?" என்றும் கேட்பீராக. "அல்லாஹ்வுக்கே" என்று அவர்கள் சொல்வார்கள்; "(அவ்வாறாயின்) நீங்கள் அவனுக்கு அஞ்சி இருக்கமாட்டீர்களா?" என்று கூறுவீராக! "எல்லாப் பொருட்களின் ஆட்சியும் யார் கையில் இருக்கிறது? யார் எல்லாவற்றையும் பாதுகாப்பவனாக ஆனால் அவனுக்கு எதிராக எவரும் பாதுகாக்கப்பட முடியாதே அவன் யார்? நீங்கள் அறிவீர்களாயின் (சொல்லுங்கள்)" என்று கேட்பீராக. அதற்கவர்கள் "(இது) அல்லாஹ்வுக்கே (உரியது)" என்று கூறுவார்கள். ("உண்மை தெரிந்தும்) நீங்கள் ஏன் மதி மயங்குகிறீர்கள்?" என்று கேட்பீராக. (அல்குர்ஆன்: 23:84-89)

February 06, 2012

நன்மைகளின் பக்கம் விரைந்து செல்பவர்களின் அழகிய செயல்கள்!

நிச்சயமாக, எவர்கள் தம் இறைவனிடம் அஞ்சுபவர்களாக இருக்கிறார்களோ அவர்களும்- இன்னும் எவர்கள் தம் இறைவனுடைய வசனங்கள் மீது நம்பிக்கை கொள்கிறார்களோ அவர்களும்- இன்னும் எவர்கள் தம் இறைவனுக்கு (எதையும்) இணையாக்காதிருக்கிறார்களோ அவர்களும்- இன்னும் எவர்கள் தம் இறைவனிடம் தாங்கள் திரும்பிச் செல்லவேண்டியவர்கள் என்று அஞ்சும் நெஞ்சத்தினராய் (நாம் கொடுத்ததிலிருந்து) தங்களால் இயன்ற மட்டும் (அல்லாஹ்வின் பாதையில்) கொடுக்கிறார்களோ அவர்களும்- இ(த்தகைய)வர்கள் தாம் நன்மைகளின் பக்கம் விரைகின்றனர். இன்னும் அவற்றை (நிறைவேற்றி வைப்பதில்) முந்துபவர்களாகவும் இருப்பார்கள். (அல்குர்ஆன்: 23:57-61)

February 05, 2012

முழு மனித சமுதாயத்தையும் இறைவன் குறித்து எச்சரிக்க வேண்டிய கடமை ஒரு முஸ்லிமுக்கு இருக்கிறது!

(நம் தூதர்கள் ஒவ்வொருவரிடத்திலும்;) "தூதர்களே! நல்ல பொருள்களிலிருந்தே நீங்கள் உண்ணுங்கள். (ஸாலிஹான) நல்லமல்களை செய்யுங்கள். நிச்சயமாக நீங்கள் செய்பவற்றை நான் நன்கு அறிபவன் (என்றும்) "இன்னும், நிச்சயமாக (சன்மார்க்கமான) உங்கள் சமுதாயம் (முழுவதும்) ஒரே சமுதாயம் தான். மேலும், நானே உங்களுடைய இறைவனாக இருக்கின்றேன். எனவே நீங்கள் எனக்கே அஞ்சுங்கள்" (என்றும் கூறினோம்). ஆனால், அ(ச்சமுதாயத்த)வர்களோ தம் மார்க்க காரியத்தில் சிதறுண்டு, தமக்கிடையே பல பிரிவுகளாய் பிரிந்து, ஒவ்வொரு பிரிவினரும் தம்மிடம் இருப்பதைக் கொண்டே மகிழ்ச்சியடைபவர்களாய் இருக்கின்றனர். (அல்குர்ஆன்: 23:51,52,53)

February 04, 2012

மனிதன் படிப்பினைப் பெற வேண்டிய பயன்கள்!

நிச்சயமாக உங்களுக்கு (ஆடு, மாடு, ஒட்டகம் முதலிய) பிராணிகளில் ஒரு படிப்பினை இருக்கிறது. அவற்றின் வயிறுகளிலிருந்து (சுரக்கும் பாலை) நாம் உங்களுக்கு புகட்டுகிறோம். இன்னும் அவற்றில் உங்களுக்கு அநேக பயன்கள் இருக்கின்றன. அவற்றி(ன் மாமிசத்தி)லிருந்து நீங்கள் புசிக்கின்றீர்கள். மேலும் அவற்றின் மீதும், கப்பல்களிலும் நீங்கள் சுமக்கப்படுகின்றீர்கள். (அல்குர்ஆன்: 23:21,22)